Tuesday 24 December 2013

வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை



ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள்
பொறுக்குகிறோம்





ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா





உன் அலை எத்தனை
விதவைகளின் வெள்ளைச் சேலை?





உன் மீன்களை நங்கள்
கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை
நீ கூறுகட்டுகிறாய்?





அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?





பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்





மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை





இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு


இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

                    -கவிஞர் வைரமுத்து

No comments:

Post a Comment